தூத்துக்குடி: கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25,000 சத்துணவு முட்டைகள் எரிந்து சேதமடைந்தன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக சத்துணவு முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. சத்துணவு முட்டைகளை வாகனங்களில் பள்ளிகளுக்கு கொண்டு செல்வதற்காக ஊழியர்கள் கதவை திறந்தபோது அங்கிருந்து புகை மூட்டம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். நல்வாய்பாக அருகில் இருந்த கட்டிடங்களுக்கு தீ பரவுவதற்கு முன்பு கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் சத்துணவு மையங்களுக்காக அனுப்ப வைக்கப்பட்டு இருந்த 25,000 சத்துணவு முட்டைகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.